நொய்யலாறு :
தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின்,மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்,சிற்றோடைகள் இணைந்து உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு,கிழக்குநோக்கி பேரூர்,குனியமுத்தூர்,வெள்ளலூர்,இருகூர்,சூலூர்,மங்கலம்,திருப்பூர்,ஒரத்துப்பாளையம்,
என 180 கிலோமீட்டர் பயணித்து,கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவேரி ஆற்றுடன் கலக்கிறது.இந்த ஆற்றின் சங்க காலப் பெயர் காஞ்சியாறு .
தோற்ற்றமும் ஆற்றின் போக்கும் :
கோவையில் நொய்யல் ஆறு என நாம் குறிப்பிட்டால் இப்போது இருக்கும் மக்களுக்கு அது சிறுவாணி அணை என நினைக்கின்றனர்.பலரும் நொய்யல் என்றால் தண்ணீரே வராதஒரு ஆறு என நினைக்கின்றனர்.
ஆனால் உண்மை அதுவல்ல.எத்தனையோ தடைகளை கடந்து கோவையை நோக்கி வரும் நொய்யலுக்கு ஒரு பின்னணி உண்டு. நொய்யல் ஆறு எங்கிருந்து எப்படி உருவாகிறது என தெரிந்தால் அதை நாம் போற்ற துவங்கி விடுவோம்.
கோவைக்கு மேற்க்கே,மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைப்பகுதியில் பல்வேறு சிறு ஓடைகள் உருவாகிறது. இப்படி 7 ஓடைகள் ஒன்று சேர்ந்து அது குஞ்சரான் முடி என பெயர் பெற்று மலைகளில் இருந்து பெரும் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதுதான் சிறுவாணி அடிவாரத்தில் காணும் பெரியாறு.இங்குதான் குற்றாலம் அருவி உள்ளது .
வடபுறத்தில் ஏறத்தாழ வெள்ளிங்கிரி மலையிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் பெய்யும் மலை,5 ஓடைகளாக ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை பெயர் பெற்று ஏற்கனவே ஓடிவரும் பெரியாற்றுடன் செம்மேடு அருகே ஒன்று சேர்கிறது.
இந்த பெரியாறு மட்டும் நொய்யல் என அழைக்கப்படுவதில்லை.இத்துடன் தூத்துமலை ஓடை,கொடுவாய்புடி ஓடை,பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என அழைக்கப்படுகிறது.இந்த சின்னாறு சாடிவயல் வழியாக பெரியாறுடன் சோலை படுகையில் ஒன்று சேர்கிறது.
பெரியாறு சின்னாறு சேர்ந்த உடன் இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் 20 ஓடைகளை ஒன்று சேர்த்து வரும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி ஆற்றில் தான் வைதேகி உள்ளது.
தொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய எல்லா ஆறுகளும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அங்கு நொய்யல் என்ற பெயர் பெறுகிறது.பின்னர் பேரூர்,கோவை நகர்,சூலூர்,திருப்பூர்,கொடுமணல்,காங்கயம் வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. நொய்யலின் நீளம் 180 கிலோ மீட்டர் இந்த ஆற்றின் சராசரி அகலம் 30 அடி நொய்யலின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகள் 32.நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரையும் மழை காலத்தில் கிடைக்கும் பெரும் வெள்ளத்தையும் நாம் முறையாக பயன்படுத்தினால் கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சமே வரத்து.நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது அதை தடுப்பணையில் தடுத்து அங்கிருந்து சிறிய வாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் முறை நொய்யலில் பயன்படுத்தப்படுகிறது. நொய்யலில் பெரும் வெள்ளம் செல்லும்போது பலரும் இந்த நீரை அப்படியே குளங்களுக்கு திருப்பினால் என்ன என கேள்வி கேட்கின்றனர். இது மிகவும் அபாயகரமானது.காரணம் நொய்யல் ஆற்றில் ஒரு மணி அதன் வேகம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இந்த நீரை தடுக்க இயலாமல் குளமே காணாமல் போய்விடும். எனவே தான் நொய்யல் ஆற்றுநீரை தடுத்து வாய்க்கால்கள் மூலம் குளங்கள் நிரப்பப்படுகிறது. கிளை வாய்க்கால்கள் மூலம் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்திலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது .
கொங்கு நாட்டின் அடையாளம் :
மனித குலம் ஓரிடத்தில் நிலைத்து நின்று நாகரீகம் வளர முக்கிய காரணமாக இருந்தவை ஆறுகளே. உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் அடையாளமாக அங்கு பாயும் ஆறு விளங்குகிறது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக அங்கு பாயும் ஆறு விளங்குகிறது. தமிழகத்தில்கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும்,அங்கு விவசாயம் வளமாக அமையாகக் காரணமாகவும் இருந்தது நொய்யல் ஆறு. தொல்லியல் பழமைவாய்ந்த கொடுமணல் இவ்வற்றின் கரையில் தான் அமைந்துள்ளது.
ஆக்கிரமிப்பும் மாசுபாடும் :
மூன்று மாவட்டங்கள் வழியாக 180 கிலோ மீட்டர் தூரம் எந்த தடையும் இன்றி ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி தற்போது பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளால் கோவையின் எல்லையை கடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நொய்யல் ஆறானது மிகவும் மாசடைந்த ஆறுகளில் ஒன்று.கோயம்புத்தூர் நகரைக் கடக்கும் போது அந்நகரின் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கழிக்கின்றனர். திருப்பூரை கடக்கும்போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளின் கழிவுகள் நொய்யலில் கலந்து இவ்வாற்றை மிகவும் மாசடைய செய்கின்றனர். சுத்திகரிக்கப்படாத சாயப் பட்டறை கழிவுகளால் அதிக அளவு அமிலங்கள் சேர்ந்து திருப்பூருக்கு பின் நொய்யல் ஆறு வேளாண்மைக்கும் குடிப்பதற்கும் ஆகாத நிலை உள்ளது. மனிதர்களுக்கும்,மண்ணிற்கும் பயன்படாத ஆறாக மாறியதால் நொய்யலை இறந்த ஆறு என்றே கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள். இக்கழிவுகள் எல்லாம் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கி அப்பகுதியின் நீர் நிலைகளை மோசமாக மாசுபடுத்தியுள்ளனர்.அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.அவர்கள் தங்களின் இப்பிரச்சனையை நீதிமன்றம் எடுத்துச்சென்று திருப்பூர் சாய பட்டறைகளுக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர் .ஆற்று நீரை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு எதிராக கடும் நிலைபாட்டை எடுத்துள்ள உச்சநீதி மன்றம்,சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே ஆற்றினில் கலக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. போராட்டங்கள்,நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் சாயப்பட்டறைகள் சாயக்கழிவை ஆற்றில் கலந்து கொண்டுதான் இருக்கின்றன.
சிறுவாணியும், நொய்யலும்:
உலகில் இரண்டாவது சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்பட்டாலும் அது இன்றைய கேரளத்தில் உள்ளது. அதே பகுதியில் உருவாகி தமிழகத்தில் ஓடும் நொய்யலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்றி
சாக்கடை,ரசாயனக் கழிவுகளைக் கலந்து மாசுபடச் செய்து பயனற்ற செத்த ஆறாக மாற்றியுள்ளனர், தமிழர்கள்.
செய்ய வேண்டியவை :
பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பிற்கு சென்ற நொய்யலாற்றை மீட்டெடுக்க கோவை,திருப்பூர்,ஈரோடுமாவட்ட இயற்கை ஆர்வலர்கள்,விவசாய அமைப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் அரசின் உதவியின்றி ஆற்றை
முழமையாக மீட்டெடுக்க முடியாது என்பது அவர்கள் கருத்து. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும்,மாநகராட்சியும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நகரப் பகுதிகளின் சாக்கடை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது
போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.மேலும் நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை கட்டமைப்புகளை சீரமைக்கும் பட்சத்தில் நிலத்தடிநீர் அதிகமாகி நொய்யல் நொய்யல் மீண்டும் உயிர் பெறும்.நூற்றாண்டுகளாக அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காக பிரச்ச்சனைகள் சந்தித்துவரும் நிலையில் இருக்கும் நீராதாரங்களை முறைப்படுத்த வேண்டும் என்பது அனைவரும் நினைவில் வேண்டிய ஒன்றாக உள்ளது.
theme color change
ReplyDelete