Saturday, 11 August 2018

தாமிரபரணி ஆறு

நான் தாமிரபரணி பேசுகிறேன்:



நெல்லை மாவட்டத்தின் இரட்டைநகரமான திருநெல்வேலி மற்றும்   பாளையங்கோட்டை ஆகியவற்றை இணைக்கும்   சுலோச்சன   முதலியார் பாலத்தில் கீழே இருந்து இதோ தாமிரபரணி பேசுகிறது  





‘‘அழகிய   மேற்குத்   தொடர்ச்சி   மலையின் மீது உள்ள அரிய மூலிகைக் காடுகளே என் தாயகம். 7 ஆயிரம் அடி உயரத்தின் மீது இருக்கும் பூங்குளம் எனது பிறப்பிடம். மலையின் மீது ஓடி வரும்போது என்னைப் பார்க்க வேண்டுமே! கரைகளாய் மறித்து நிற்கும் மலைகளில் முட்டி, அடர்ந்த வனங்களின் ஊடாகப் பாய்ந்து வரும்போது எனக்கே மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. மலையில் இருந்து கீழிறங்கி வந்து உங்களை எல்லாம் சந்திக்க நான் மிகுந்த ஆர்வத்துடன் வந்தேன். ஆனால், என் மகிழ்ச்சியைக் குலைத்துவிட்டீர்களே... நியாயமா?


ஆலைக் கழிவுகளால் ஏற்பட்ட அவலம்!

அதனைத் தாண்டி வந்ததும் தனியார் ஆலையின் கழிவுகள் என்னை அசுத்தப்படுத்தின. திடீர் திடீரென இரவு நேரங்களில் கழிவுகளை என்னில் கலந்து மாசுபடுத்தினர். அதைத் தொடர்ந்து சில காகித ஆலைகளும் தங்கள் பங்குக்கு என் மீது கழிவுகளைக் கொட்டின. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் பச்சைப்பசேல் என நெல் வயல்கள் சூழ, நெல்லுக்கு வேலியாக, ‘திருநெல்வேலி’ என அழைக்கப்பட்டேன். நான் நடைபயின்ற பாதை எனக்குப் பிடிக்கவே செய்தது. ஆனால், இப்போதெல்லாம் ஊருக்கு அருகில் வரும்போதெல்லாம் நானே மூக்கைப் பொத்திக்கொள்கிறேன். காரணம், ஒட்டுமொத்த ஊரின் கழிவுநீரும் கலக்கும் இடமாக என்னை மாற்றிவிட்டார்கள். என்னைக் கழிவுநீர் செல்லும் சாக்கடையாக மாற்றும் முயற்சியில் உள்ளாட்சி நிர்வாகங்களே ஈடுபட்டன. 



அள்ள அள்ளப் பணம்!


 உங்களுக்கு மட்டும் என் மீது ஏன் அத்தனை வெறித்தனம்? எனது உதிரத்தை உறிஞ்சும் வகையில் மணல் கொள்ளை என்கிற மாபாதகச் செயலைச் செய்ய எப்படித்தான் மனம் வந்தது?

பக்கத்து மாநிலங்களில் மணலுக்கு கிராக்கி இருப்பது தெரிந்து, இரவு பகலாக பொக்லைன் என்னும் ராட்சத இயந்திரத்தின் துணையுடன் ஆயிரக்கணக்கான லாரிகளில் அள்ளிய மணலை அதிகாரிகளின் துணையுடன் கடத்திச் சென்றார்கள். அரசியல் பின்புலம் மிகுந்த செல்வாக்கான நபர்களின் ஆணை காரணமாக அந்த அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்தது வேடிக்கையே. என்னில் கிடைக்கும் மணலை, அள்ள அள்ளப் பணம் எனப் புரிந்துகொண்டதும் வேகத்துடன் செயல்பட்டார்கள். கேரளாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட மணல், வெளிநாடுகள் வரை சென்றது.

உலர்ந்துபோன உறைகிணறுகள்!

மலையில் இருந்து இறங்கியது முதலாக புன்னக்காயல் என்கிற இடத்தில் கடலில் கலக்கும் வரையிலும் 125 கி.மீ தூரத்துக்கு வளைந்து நெளிந்து ஓடுகிறேன். என்னில் 11 கால்வாய்கள் அமைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். மொத்தம் 2.55 லட்சம் ஏக்கர் நிலம் என்னால் பாசன வசதி கிடைக்கிறது என்பதை நினைத்தால் சற்று பெருமிதமாகத்தான் இருக்கிறது. இதில் 69 சதவிகிதம் இருபோக விவசாயம் நடக்கிறது. எஞ்சிய 31 சதவிகிதம் நிலத்தில் ஒருபோக சாகுபடி நடக்கிறது. இப்படி நான் பயன்படுவதற்கு அடிப்படையாக இருப்பது ஆற்று மணல். அதனை அள்ளிவிட்டால் வேகமாக ஓடிச்சென்று கடலில் கலந்துவிடுவேன். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வழி இல்லாமல் போய்விடும்.




மழைக்காலத்தில் என்னைத் தேக்கிவைக்க போதுமான அணை, நீர்த்தேக்கம் போன்ற வசதிகளைச் செய்ய யாரும் முன்வரவில்லை. அதனால்தான் இந்த நிலைமை. இந்தப் பகுதியில் ராதாபுரம் ஏரியா பாலைவனமாகக் காட்சி அளிக்கிறது. அங்குள்ள தேரிக்காட்டையும் அப்படித்தான் இருக்கும். அங்கு நிலவும் வறட்சியை சமாளிப்பதற்காக மத்திய அரசின் உதவியுடன் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன. இந்தத் திட்டம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால் வறட்சிப் பகுதிகள் வளம்பெறும். இந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக 25 டி.எம்.சி நீர் வீணாகக் கடலில் கலந்து இருப்பதாகப் புள்ளிவிவரம் சொல்கிறார்கள், பொதுப்பணித் துறையினர். இப்படி வீணாக்கிவிட்டு, கர்நாடக அரசிடம் 7 டி.எம்.சி நீருக்காகக் கையேந்தி நிற்பதை என்ன சொல்வது?


ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கினேன்!




மணல் கொள்ளை, மாசு கலப்பு என்பது ஒருபக்கம் இருந்தாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும் எனது முகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதே நிஜம். கரையோரங்களில் என்னை ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் அதிகமான செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்தச் சூளைகளின் கழிவுகள் அனைத்தையும் என்னுடேனேயே கலக்கிறார்கள். அத்துடன், ஒரு சிலரின் பேராசை காரணமாக விளைநிலங்களாகவும் என்னை மாற்றி எனது திசையையே திருப்பிவிடும் கொடூரமும் நடக்கத்தான் செய்கிறது. ஆற்றின் ஓரத்தில் துணிச்சலுடன் முள்வேலி அமைத்து விளை நிலங்கள் அமைக்கும் மக்களுக்கு அதற்கான துணிவைக் கொடுப்பது எதுவாக இருக்கும்?



சிலர் எனது வழித்தடத்தில் வீடுகளைக் கட்டுகிறார்கள். மழைக்காலத்தில் நான் ஆக்ரோஷம் காட்டித் துள்ளிக்குதித்து ஓடிவரும்போது ‘பெருவெள்ளம்’ என்கிற அடைமொழியோடு என்னைச் சபித்துக்கொண்டே மாற்று இடம் தேடுகிறார்கள். ஆனாலும், இன்னும்கூட சில வீடுகள் அதே பகுதியில் இருக்கவே செய்கின்றன. 


அத்துமீறும் நிறுவனங்கள்:

விவசாயிகளை ஏமாற்றி தங்களது நிறுவனங் களின் லாபத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு நீரைக் கொள்ளையடிக்கும் நிறுவனங்கள் நிறையவே இருக்கின்றன. ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள இரு தனியார் ஆலைகளுக்காகத் தனியாக பைப் லைன் அமைத்து நீர் கொண்டு செல்லப்படுகிறது. விவசாயிகளுக்குத் தண்ணீர் இல்லாத சமயத்திலும் கூட இந்த நிறுவனங்கள் நீரை உறிஞ்சுவதை நிறுத்துவதில்லை. பாதிக்கப்படும் விவசாயிகள் ஆற்றோரம் நின்று என்னைப் பார்த்துப் புலம்புவதைப் பார்க்கையில் மனம் கனத்துப் போகும்.



நெல்லை அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் உள்ள பன்னாட்டு குளிர்பான ஆலைக்காக குத்தகை அடிப்படையில் சொற்ப தொகைக்கு தண்ணீர் கொடுக்கப்படுகிறது. அதே நிறுவனம் அந்த ஆலையை விரிவுபடுத்தவும் அனுமதி பெற்று கூடுதலாக நீரை எடுக்கிறது. இதனிடையே, இன்னொரு பன்னாட்டு குளிர்பான நிறுவனத் துக்கும் அதே இடத்தில் ஆலை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட இருக்கும் விவசாயிகளை நினைத்து  எனக்கு வேதனையாக இருக்கிறது

இத்தனை வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்தபடி புன்னக்காயலில் கடலில் கலக்கிறேன். பூங்குளத்தில் தெளிந்த நிலையில் இருக்கும் எனது நிலைமை புன்னக்காயலில் அழுக்கு நிறமாக மாறி இருப்பதில் இருந்தே எனது பயணத்தின்  பட்ட வேதனைகளை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். என்னை இனியாவது நேசிப்பீர்களா?

நதி... அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தது. 

No comments:

Post a Comment

நொய்யலாறு

நொய்யலாறு :     தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின்,மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ,சிற்றோடைகள...